ஹூவாய் நிறுவனம் தனது சொந்த இயங்குதளமான ஹார்மனி ஓஎஸை நேற்று அறிமுக செய்தது.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹூவாயுடன் வியாபாரம் செய்யக்கூடாது என டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஹூவாய் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹூவாய் நிறுவனம் தனது சொந்த இயங்குதளமான ஹார்மனி ஓஸை நேற்று அறிமுகம் செய்தது.
தெற்கு சீனாவின் டோங்குவானில், நேற்று நடைபெற்ற அதன் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் ஹூவாய் அதன் புதிய இயங்குதளத்தை அறிவித்தது. இந்த அறிமுக விழாவில், "தேவைப்பட்டால் தனது புதிய ஹார்மனி ஓஎஸ் ஆனது ஆண்ட்ராய்டு ஓஎஸை மாற்றக்கூடும்" என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், "ஹார்மனி ஓஎஸ் என்பது இலகுரக, சக்திவாய்ந்த செயல்பாட்டைக் கொண்ட சிறிய இயக்க முறைமையாகும், மேலும் இது முதலில் நிறுவனத்தின் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், ஸ்மார்ட் ஸ்கிரீன்கள், இன்-வெயிக்கில் அமைப்புகள் மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் போன்ற ஸ்மார்ட் சாதனங்களில் பயன்படுத்தப்படும்" என்று ஹூவாய் கூறியுள்ளது.
இதை அடுத்து ஹூவாய் நுகர்வோர் வணிக குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியான ரிச்சர்ட் யூ பேசுகையில், ”ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இருந்து ஹார்மனி ஓஎஸ் முற்றிலும் மாறுபட்டது. இது ஒற்றை ஸ்மார்ட்போனில் அதிக செயல்பாட்டை வழங்குவதற்கு பதிலாக, பல்வேறு சாதனங்கள் முழுவதும் தடையற்ற ஒத்துழைப்பை வழங்கும். இது மைக்ரோ கேர்னல் (Microkernel) அடிப்படையிலான பரப்பலான இயங்குதளம் (Distributed OS) ஆகும், ஆக இது சூழ்நிலைகளிலும் மென்மையான அனுபவத்தை வழங்கும்" என்று கூறினார்.